மின்சேவை தொடர்பான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பெற வேண்டும்: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சேவை தொடர்பான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பெற வேண்டும்: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்: புதிய மின்இணைப்பு கோருதல் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையிலும், அதுதொடர்பாக எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் மென்பொருளை உருவாக்க வேண்டும்.

கட்டிடங்களில் கட்டுமான பணி முடிந்த பிறகு, தற்காலிக இணைப்பில் இருந்து நிரந்தர வகைக்கு இணைப்பு மாற்றவும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய ஆவணங்களின் அதிகபட்ச அளவு போதுமானதாக இல்லை. குறைந்தது 5 எம்.பி. அளவுக்கு அதிகரிக்க வேண்டும்.

மின்கட்டணம் செலுத்தாதவிட்டால் மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறது. வீடுகளில் யாரும் இல்லாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரம் நுகர்வோருக்கு தெரிவதில்லை. பின்னர், அதிக அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, மின்கட்டணம் துண்டிக்கப்படும் விவரத்தை அதற்கான காரணத்துடன் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அல்லது வாட்ஸ்அப் மூலம் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்.

தாழ்வு அழுத்த பிரிவில் இடம்பெறும் தொழிற்சாலைகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கணக்கெடுக்க அதற்கான மீட்டரை உடனே பொருத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in