​பெங்களூரு விமான நிலையத்தில் இடம் இல்லாததால் சென்னையில் தரையிறக்கப்பட்ட 5 விமானங்கள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பெங்களூரு விமான நிலையத்தில் இடம் இல்லாததால் 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவில் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டன. இதனால் விமானங்களை பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், விமானங்கள் பெங்களூரில் தரையிறங்கி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வந்த 5 விமானங்கள், நள்ளிரவில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வகையில் ஐதராபாத், ஹாங்காங், கோவா, ஃபிராங்க்ஃபர்ட், நாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூரு வந்த 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, இங்கு வந்து தரை இறங்கின.

பின்னர், பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் பிறகு பெங்களூரு விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து, விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 விமானங்களும், அதிகாலை 2.20 மணியிலிருந்து 3.55 மணிக்குள், ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டு சென்றன.

இதனால் அந்த 5 விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும் நீண்ட நேரம் விமானத்துக்குள் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டு, கடும் அவதிக்கு உள்ளாகினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in