Published : 30 Apr 2025 04:25 AM
Last Updated : 30 Apr 2025 04:25 AM
சென்னை: குற்றங்கள் நடக்காத, போதை பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்ற நிலையை நாம் எட்ட ஒவ்வொரு காவலரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
தமிழகத்தின் அமைதிக்கு, காவல்துறைதான் காரணம். ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். தொழிற்சாலைகள் வரும். கல்வி மேம்படும். பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள். உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சட்டம் - ஒழுங்கு சீராகவும், அமைதிமிகு மாநிலமாகவும் தமிழகம் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதி சண்டைகளோ, மதக்கலவரங்களோ, வன்முறைகளோ நடைபெறவில்லை.
கலவரங்களைத் தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழக மக்களே அதை முறியடித்து விடுகின்றனர். இதெல்லாம் நடந்திருந்தால்தான், ‘சட்டம் - ஒழுங்கு சரியில்லை’ என்று புழுதிவாரி தூற்ற முடியும். மொத்தத்தில், சட்டம் - ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்களின் ஆசையில் மண்தான் விழுந்திருக்கிறது.
குற்றச்சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால்கூட, அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இது, மணிப்பூர் அல்ல. இது, காஷ்மீர் அல்ல. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை. குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும். இந்த நிலை உருவாகவேண்டும் என்றால், காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கூட்டு பொறுப்பு. அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்.
உங்கள் சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும். காவல்துறையிடம் அதிகாரம் இருக்கிறது. அது சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும்தான் என்பதை அத்துமீறும் சில காவலர்கள் உணரவேண்டும். காவல் உயரதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்.
காவலர்களின் சேவையைப் போற்றி பாராட்ட முதன்முதலாக 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்.6-ம் தேதி, இனி ஆண்டுதோறும் ‘காவலர் நாளாக’க் கொண்டாடப்படும். இந்நாளில், சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல்துறையின் சிறப்புகளை சொல்லக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்துதல், குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அன்று நடைபெறும்.
தமிழகம், குற்றங்கள் நடக்காத மாநிலம். போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம். பாலியல் குற்றம் இல்லாத மாநிலம் என்ற நிலையை நாம் எட்டவேண்டும்.
இந்த உறுதிமொழியை நானோ, காவல் துறையின் உயரதிகாரிகள் எடுத்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு காவலரும் எடுக்கவேண்டும். ‘என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை. நடக்கவும் விடமாட்டேன்’ என்று ஒவ்வொரு காவலரும் முடிவெடுத்துவிட்டால், குற்றங்கள் பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும்.
‘காலனி’ சொல் நீக்கம்: இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியைவிட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்து துறைகளிலும் செய்திருக்கிறோம். இந்த உறுதியோடும், மக்கள் மேல் உள்ள நம்பிக்கையோடும் சொல்கிறேன். அடமானம் வைக்க நினைப்பவர்களாலும், அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழகத்தை ஒருபோதும் சூறையாட முடியாது. மாநில சுயாட்சி கனவையும் நிறைவேற்ற குழு அமைத்திருக்கிறோம்.
நான் தொடங்கியுள்ள இந்த பயணம் நீண்டது. முதல்வராக 5-ம் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன், என் பயணம் தொடரும். தமிழகத்துக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட்-1 தான். 2026-ல் வெர்ஷன் 2.0 லோடிங். அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழகம் வரலாறு படைக்கும்.
7-வது முறையும் திமுக ஆட்சி: இதுவரை செயல்படுத்திய திட்டங்களால், செய்துள்ள சாதனைகளால் தில் திமுக ஆட்சிதான் அமையும். கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேடுகளை மாற்றி தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க மக்கள் திமுகவை ஆட்சி பொறுப்பில் அமர்த்தினார்கள்.
அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழகம் இன்றைக்கு எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இதுவரை தமிழகமே பார்க்காத சாதனை இது. இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத சாதனையும் கூட. கடந்த 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டி நம்பர் 1 நிலையை தமிழகம் அடைந்திருக்கிறது.
சாதனைக்கு மேல் சாதனையை செய்து கொண்டிருக்கிறது தமிழகம். இந்த சாதனைகளையெல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள். இதற்கெல்லாம் இடையில் மாட்டிக்கொண்ட மனிதனை போல ஒருபக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என தடைகளை கடந்து நிகழ்த்தப்பட்ட சாதனைகளாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT