நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மதுரை: நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சிதம்பரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறோம். நெல்லை வழக்கறிஞர் சங்கத்துக்கு 2025- 2026 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஏப்.30) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் வாக்குகளை சரிபார்க்க குழு அமைக்க வேண்டும்.

அவ்வாறு எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இவ்வாறு விதிமுறைகளை மீறி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே, வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். விதிப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குழு அமைத்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று (ஏப்.29) விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in