Published : 28 Apr 2025 05:03 AM
Last Updated : 28 Apr 2025 05:03 AM
சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது நண்பர். ஆனால், அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள். திருமாவளவனின் கருத்துகள், அவர் தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது.
அதிமுக அனைவரையும் மதிக்கும் பண்பை கொண்டுள்ளது. சிறிய கட்சிகளாக இருந்தாலும், உரிய மரியாதை கொடுப்போம். ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் கசப்பான அனுபவத்தோடு, கசப்பான மனநிலையோடுதான் கூட்டணியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் விசிக சேருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். எதிர்காலத்தில் எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT