சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் - முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஏப்.26) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (51), எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (48) மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35) ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (55), கோமதி (55), பாத்திமுத்து (55), ராபியா பீவி (50), ராமசுப்பு (43),லட்சுமி (40), முனியம்மாள் (40), ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in