Published : 24 Apr 2025 06:15 AM
Last Updated : 24 Apr 2025 06:15 AM
சென்னை: சொத்து பிரச்சினைகளில் தலையிட்டு அடியாட்கள்போல செயல்படும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் ரூ.103 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி கட்டிட உரிமை தொடர்பாக ஆர்.பி.சீனிவாசன் என்பவருக்கும், சுஷில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றங்களில் பரஸ்பரம் வழக்கு தொடர்ந்துள்ளனர். சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் சுஷில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி இடைக்கால தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில், சொத்தை கையகப்படுத்த வழக்கறிஞர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக சுஷில் லால்வாணி தரப்பினர் மீது கண்ணகி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் சுஷில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், இதுபோன்ற வில்லங்க சொத்து பிரச்சினைகளில் வழக்கறிஞர்கள் அடியாட்கள் போல செயல்படுவதாக கூறி கண்டனம் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட அந்த வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்ற உத்தரவை விளக்கி கூறத்தான் அங்கு சென்றனர் என்றனர். அதற்கு காவல் துறை தரப்பில், அங்கிருந்த காவலாளியை தள்ளிவிட்டு ஊழியர்களை தாக்கியதாக மனுதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்துள்ள உத்தரவு: வீடியோ காட்சிகளை பார்க்கும்போது தனது கட்சிக்காரர்களுக்காக வழக்கறிஞர்கள் கூலிப்படையினர்போல செயல்பட்டு இருப்பது வேதனைக்குரியது. வழக்கறிஞர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் பெயர்களை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு போலீஸார் வழங்க வேண்டும்.
பார் கவுன்சில் அவர்கள் மீது சட்ட ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இளம் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து பிரச்சினைகளில் தலையிட்டு அடியாட்கள்போல செயல்படும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT