Published : 24 Apr 2025 06:09 AM
Last Updated : 24 Apr 2025 06:09 AM

பேருந்​துகளில் 360 டிகிரி கோணத்​தில் இயங்​கும் கேம​ராக்​கள்: அமைச்​சர் சிவசங்​கர் அறி​விப்பு

சென்னை: தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான நிதியாக வரும் ஆண்டில் ரூ.3,600 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் 3,378 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன.

இன்னும், 8,123 பேருந்துகள் பல்வேறு திட்டங்களின் மூலமாக வாங்கப்பட இருக்கின்றன. தனியார் ஒப்பந்த முறையிலான மினி பேருந்துகள் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்’’ என்றார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்: அரசு நிதியுதவி மூலம் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.642 கோடி வழங்கி தீர்வு காணப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களின் 50 பேருந்து பணிமனைகள் ரூ.75 கோடியில் புதுப்பிக்கப்படும். மேலும், 4,000 பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 500 பேருந்துகளில் ரூ.2 கோடியில் ஒட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். சென்னையில் அயனாவரம் உட்பட 6 பேருந்து முனையங்கள் ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும். அதனுடன் 100 பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன இயந்திரங்கள், கருவிகள் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், 100 பணிமனைகளில் பணியாளர்கள் பயன்பாட்டு ஒப்பனை அறைகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒட்டுநர் தேர்வுத் தளத்துடன்கூடிய கட்டிடம் ரூ.7.27 கோடியில் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மாதிரி போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும். போக்குவரத்து ஆணையரகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கப்படும்.

திறன்மிகு ஒட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் தேவண்ணகவுண்டனூரில் ரூ.17.25 கோடியில் ஒட்டுநர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். மேலும், சாலை விபத்துகளை தடுப்பதற்காக 2025-26-ம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு நிதியானது ரூ.130 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 22 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x