Published : 22 Apr 2025 06:31 AM
Last Updated : 22 Apr 2025 06:31 AM
புதிய மருத்துவ கல்லூரி, நீட் தேர்வு, பாஜக கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை அதிமுக உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றீர்களா. இடங்களை தேர்வு செய்தீர்களா?
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஊட்டியில் 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை முதல்வர் தொடங்கி வைத்தார். பழங்குடியினருக்கு பிரத்யேக வார்டுகளும் உள்ளன.
பழனிசாமி: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளீர்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடைபெற்றன. திமுக ஆட்சிக்கு வந்து திறக்கப்பட்டன.
மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் இருப்பதால், கூடுதலாக மருத்துவக் கல்லூரி தர மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. ஆனாலும், முதல்வர் பிரதமரை சந்திக்கும் போதும், கடிதம் மூலமாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டு வருகிறார். பல்வேறு மாநிலங்கள் தமிழக மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகின்றனர்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை கொடுத்துவிட்டு 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தந்தது.
பழனிசாமி: கடந்த 2010-ல் திமுக இணையமைச்சராக காந்திசெல்வன் இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிவிப்பு வந்தது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக. அதனை தடுக்க முயற்சித்தது அதிமுக.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. உங்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்தது.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை: தமிழகத்துக்குள் நீட் தேர்வை அனுமதித்தது யார் என்று மக்களுக்கு தெரியும்.
பழனிசாமி: நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார். உச்ச நீதிமன்றத்தில் நீட் வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரின் மனைவி தமிழகத்துக்கு எதிராக வாதாடினார். நீட் தேர்வை கொண்டு வந்தது எல்லாம் உங்கள் கூட்டணி தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு சிக்கலை சரிசெய்ய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம். இல்லையென்றால் விலகுவோம் என்று சொல்வீர்களா?
பழனிசாமி: நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செயல்பட முடியுமா?
மு.க.ஸ்டாலின்: மத்திய அரசால் முடியும். எல்லாவித அதிகாரமும் உள்ளது. மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அதனை நீங்கள் வலியுறுத்த தயாரா?
பழனிசாமி: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம்தான் இறுதி செய்ய முடியும். 2 வாரத்துக்கு முன்பு வந்த ஒரு தீர்ப்பு சரியாக உள்ளது என்று சொன்னீர்கள். அப்படி இருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எப்படி செயல்பட முடியும். 2021-ல் பொய்யாக வாக்குறுதி கொடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை.
மு.க.ஸ்டாலின்: நாங்கள் வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். மறுக்கவில்லை. மத்தியில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையை போட்டு, அந்த கூட்டணியை தொடர்வீர்களா என்பதுதான் என் கேள்வி. நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே. யாரை ஏமாற்ற இந்த நாடகம்?.
பழனிசாமி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தது. 1999-ல் திமுக இதே பாஜகவுடன் தானே கூட்டணி வைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி வந்தது. மிசாவில் நீங்கள் ஜெயிலில் இருப்பது போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டது. அப்படி இருப்பவர்களுடன் நீங்கள் கூட்டணி சேரும்போது, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்வதில் தவறு இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT