Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கை 21-ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
வருமான வரிக்கணக்கு காட்டாததற்கான அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாக வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரலுக்கு ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அதன் மீதான உத்தரவை விரைவில் பிறப்பிக்க உள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. "வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனு மீது விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்று ஜெயலலிதா, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT