Published : 21 Apr 2025 05:57 AM
Last Updated : 21 Apr 2025 05:57 AM
சென்னை: கல்குவாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வருக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானத் தொழில்களுக்கு நாள்தோறும் 10 ஆயிரம் லோடு மணல், எம்சாண்ட், கருங்கல் ஜல்லி தேவைப்படும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் நாள்தோறும் 3 ஆயிரம் லோடு தேவைப்படுகிறது. இந்நிலையில், கல்குவாரிகளில் கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைசீட்டுக்கு அரசுக்கு இதுவரை கனமீட்டர் அடிப்படையில் வரி செலுத்தப்பட்டது.
1.50 லட்சம் டிப்பர் லாரிகள்.. தற்போது மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கெதிராக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பர் லாரிகள் ஓடவில்லை.
இதனால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், எம்சாண்ட், கருங்கல் ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லாரி ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிரஷர், குவாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT