Published : 21 Apr 2025 06:36 AM
Last Updated : 21 Apr 2025 06:36 AM
திருச்சி: திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறையூர் பணிக்கன் தெரு, மின்னப்பன் தெரு பகுதியில் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக பிரியங்கா(4) என்ற சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும், 17 பேர் அரசு மருத்துவமனையிலும், 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி மறுப்பு: ஆனால், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என மறுத்துள்ள திருச்சி மாநகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை காரணமாகவே மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், 4 வயது சிறுமிக்கு பாரம்பரிய முறையில் வயிற்றில் தொக்கு நீக்குதல் செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நேற்று 9 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர். அத்துடன், புதை சாக்கடை அடைப்பை நீக்குவது, குளோரின் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளை நேற்று பார்வையிடச் சென்ற மாநகராட்சி மேயர் அன்பழகனை அப்பகுதியினர் முற்றுகையிட்டு, “10 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக நாங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், உயிரிழப்போ, உடல்நலக் குறைவோ ஏற்பட்டிருக்காது” என்றனர். இழப்பீடு வழங்க வேண்டும் இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் 15 நாட்களாக குடிநீரில் பிரச்சினை இருப்பதாக மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. பொய்களைக் கூறி சமாளிப்பதை விட்டுவிட்டு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT