Published : 20 Apr 2025 12:05 AM
Last Updated : 20 Apr 2025 12:05 AM
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் எம்.அருணா தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 139 பேருக்கு ரூ.1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்காது. தமிழக அரசு மீது எந்தக் கருத்தையும் மத்திய அரசு திணிக்கக்கூடாது. கல்வி, சுகாதாரம் போன்றவை பொதுப் பட்டியலில் இருப்பதால்தான், அதுதொடர்பாக முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதை அனுமதிக்க முடியாது எனவும், 142-வது சட்டப் பிரிவு ஜனநாயக சக்திக்கு எதிரானது என்றும் குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்தார். குறிப்பாக, 142-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வக்பு திருத்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிறகே அக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் மூலம் பாஜக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அவரது கருத்து, உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் விதமாக உள்ளது.
ஆளுநரை கேள்வி கேட்கக் கூடாது. குடியரசுத் தலைவரை கேள்வி கேட்கக் கூடாது என்பதைக்கூட ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை விமர்சிக்கிற உரிமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்குள் திமுக அரசு மீது அவதூறான பிரச்சாரத்தை அதிமுக செய்து வருகிறது.
3 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தற்போது வார்த்தைகளை மாற்றி பேசுகிறார்.
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT