உதவி ஆய்வாளர், காவலர்களுக்கு வார விடுமுறை கோரி மனு தாக்கல்

உதவி ஆய்வாளர், காவலர்களுக்கு வார விடுமுறை கோரி மனு தாக்கல்
Updated on
1 min read

மதுரை: தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். காவலர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான காவலர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையிலான பணியில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. காவலர்கள் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிபுரிய வேண்டியுள்ளது. இதன் காரணமாக காவலர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in