Published : 17 Apr 2025 06:26 PM
Last Updated : 17 Apr 2025 06:26 PM

“அதிமுகவை மிரட்டி, உருட்டி கூட்டணி அமைத்தது பாஜக” - செல்வப்பெருந்தகை விமர்சனம்

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல. அது ஒத்துக்கொள்ளாத கூட்டணி. ஒரு கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்று சொல்ல முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (ஏப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் சேர்ந்து உருவாக்கியது அசோசியேட் ஜெர்னல். இது எங்களது தலைவர்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் நேஷனல் ஹெரால்டு, நவ்ஜீவன் உள்ளிட்ட 3 பத்திரிக்கைகள் கொண்டுவரப்பட்டன.

அதன்பின் பணத் தட்டுப்பாடு காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘யங் இந்தியா’ என்ற லாபம் ஈட்டாத, ஒரு நிறுவனத்தை நிறுவினர். இந்நிறுவனம் காங்கிரஸ் குடும்பத்தால் சட்டப்படி கையாளப்பட்டு வரும் நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஒரு காலத்தில் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள், சமூக விரோதிகள், தேசத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற துறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைக்கு ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவும், காங்கிரஸ் கூட்டணியும் சரியான ஜோடிகள் என்று சொல்கிறார். அது உண்மைதான். மக்கள் நலப் பணிகளில், மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களில், மதவாதிகளை எதிர்ப்பதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சரியான ஜோடிதான். இந்துத்துவவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சனாதனவாதிகளுக்கும் எதிரானது திமுக, காங்கிரஸ். இவை எல்லா மக்களுக்குமான கட்சிகள். ஆனால் எல்லாருக்குமான கட்சி பாஜக என நயினார் நாகேந்திரன் சொல்லுவாரா?

அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல. அது ஒத்துக்கொள்ளாத கூட்டணி. ஒரு கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்று சொல்ல முடியாது. விருப்பமான கூட்டணியாக இது இருந்தால், மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசியிருக்க வேண்டும். அவர் ஏன் பேசவில்லை? அல்லது அவரை பேச அனுமதிக்கவில்லையா? ஒரு கட்டாயத்தின் பேரில் மிரட்டி, உருட்டி சேர்ந்திருக்கிறார்கள் என்பதே என்னுடைய கருத்தாகும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x