Published : 17 Apr 2025 03:15 PM
Last Updated : 17 Apr 2025 03:15 PM
சென்னை: ‘அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பாக இன்று மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஏப்.17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிடச் செய்த நீதிபதி, “இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அவரது பேச்சு பெண்களை, சைவ - வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. வெறுப்புப் பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக டிஜிபி மாலை 4.45 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர், “வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல அவருடைய பேச்சு பெருவாரியாக சென்றடைந்து விட்டது. அவர் மன்னிப்பு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. நன்றாக தெரிந்தே அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசியிருக்கிறார். அமைச்சர் பொன்முடியின் பேச்சு வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன.
இதே பேச்சை வேறு யாராவது ஒருவர் பேசி இருந்தால் இந்நேரம் 50 வழக்குகளாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்று நீதிபதி தெரிவித்தார். ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே நடிகை கஸ்தூரி, ஹெச்.ராஜா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா, இல்லையா? வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், ஏன் என்பது குறித்து டிஜிபி காணொலி மூலமாகவோ அல்லது அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை 4: 45 மணிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT