Published : 17 Apr 2025 02:31 PM
Last Updated : 17 Apr 2025 02:31 PM

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்: இந்து முன்னணி

சென்னை: இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமீபத்தில் வக்பு வாரிய திருத்தத் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 இந்து குடும்பங்களின் பூர்வீக சொத்துக்கள் வக்பு வாரியத்திற்குச் சொந்தம் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அநீதியை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் வேலூர் இறைவங்காடு கிராமத்து அப்பாவி இந்துக்களின் சொத்தின் உரிமையை பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினர் தாஜா என்பது மாறி இந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது, மதமாற்றத்தால் இந்து குடும்பங்களை சீரழிப்பது, கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது என அக்கிரம செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைப்போகின்றனர். இதனை இந்துக்கள் இன்னமும் உணரவில்லை என்றால் நாளை நாம் அகதிகளாக அடைக்கலம் தேடி திரியவேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வக்பு வாரியத்தின் அநியாயமான செயல்பாடு குறித்து தமிழகத்தில் தான் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. திருச்சி - திருச்செந்துரை கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மற்றும் பல நூறு ஏக்கர் இந்துக்களின் பரம்பரை சொத்துக்கள் வக்பு வாரிய சொத்து என சொந்தம் கொண்டாடியது. இஸ்லாம் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே இருந்த சிவன் கோயில் வக்பு வாரியச் சொத்து என்று கூறியதை திமுக எம்.பி.க்கள் மழுப்பினார்கள்.

ஆனால் இதே திமுக அரசு மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிகமாக வக்பு வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் சொத்து விற்பனையை பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு கொடுக்க வைத்தார்கள். உண்மையை சில நாட்களுக்கு மறைக்கலாம். எப்போதும் முடியாது. இந்துக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வக்பு வாரியத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதிளையும் தார்மீக ரீதியாக எதிர்க்கத் துணிய வேண்டும்.

மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய பிரிவினை காலத்தில் நடந்த மனித வேட்டையை நினைவுபடுத்துகிறது. இதன் ஆபத்தை நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் உணர வேண்டும். திருச்சி - திருச்செந்தூரை, திருப்பூர் - மங்கலம், சென்னை - திருவல்லிக்கேணி என பல மாவட்டங்களில் இந்துக்களின் சொத்துக்களை வக்பு வாரியச் சொத்து எனக்கூறி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏன் திருப்பரங்குன்றம் முருகன் மலையே வக்பு சொத்து என்று திமுக எம்பி நவாஸ் கனி கூறினார்.

இன்று வேலூர் இறையங்காடு கிராமமே வக்பு வாரியச் சொத்து என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் இந்துக்கள் யாராவது வந்து நம்மையும் நமது சொத்துக்களையும் காப்பாற்றுவார்கள் என்று சும்மா இருந்தால் இந்த சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் இந்துக்களை அனாதைகளாக, அகதிகளாக ஆக்கிவிடுவார்கள். இலங்கையில் நடந்தது போல் இனப் படுகொலை நடந்தாலும் இந்துக்களின் சொத்துக்கள் பறிபோனாலும் இந்த அரசியல்வாதிகள் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.

வேலூர் - இறைவங்காடு இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அக்கிரமம் முடிவுக்கு கொண்டு வருவதுடன் இனி வருங்காலத்தில் இந்துக்கள் சொத்தினை அபகரிக்க வக்பு வாரியம் கைகளை நீட்டாது இருக்க புதிய வக்பு வாரிய திருத்தச்சட்டம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட இந்துக்கள் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணர்வால் அங்கு ஆளுகின்ற கம்யூனிச அரசு புதிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x