Published : 16 Apr 2025 11:51 AM
Last Updated : 16 Apr 2025 11:51 AM
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு வளசரவாக்கம், கிண்டி, அசோக் நகர், போரூர், மதுரவாயல், ஆயிரம் விளக்கு, வானகரம், சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை மேற்கொள்கின்றனர்.
ஆவடியில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆவடியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT