

சென்னை: ஹஸ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, சமுகவலைதளத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரைப் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனித நேயமக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்த ஆண்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமாக, இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 52,௦௦௦ நபர்களுக்குச் சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்திருந்தது. ஹஜ் பயணம் செல்வதற்கு கட்டணம் செலுத்த இறுதி நாள் மார்ச் 25-ம் தேதி என காலக்கெடு சவுதி அரசால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமாக, புனித ஹஜ் பயணம் செல்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால் அந்த பெரும் தொகை சவுதி அரசுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல இருந்த 52 ஆயிரம் ஹாஜிகளின் விசாவை சவுதி அரசாங்கம் நிறுத்தி வைத்துவிட்டது. இதன்மூலமாக, இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கான வாய்ப்பையே உருவாக்கித் தராமல் மத்திய அரசு ஏமாற்றியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.