

சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக இருந்தவர் மகேஷ்குமார். தமிழக அரசு நடத்தும் குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்து பின்னர், ஐபிஎஸ் ஆக அந்தஸ்து பெற்றவர். இவர்மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், இணை ஆணையர் மகேஷ் குமார் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். புகார் அளித்த அன்றே மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக உள்ள சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டியும், பாலியல் குற்றச்சாட்டு புகார் குறித்து விசாரணை மேற்கொண்டது.
இதுஒருபுறம் இருக்க மகேஷ்குமாரின் மனைவியும் முன்னாள் எஸ்ஐயுமான அனுராதா டிஜிபியிடம் மறுநாள் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் கூறும்போது, “எனது கணவர் மீது அந்த பெண் போலீஸ் புகார் அளித்ததுபோல எதுவும் இல்லை. அவர்கள் 2 பேருக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது.
எனது கணவரிடம் அந்த பெண் காவலர் அவ்வப்போது பணம் கேட்பார். அவரும் கொடுத்து வந்தார். அந்த பெண் மறைமலைநகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக ரூ.25 லட்சம் கேட்டார். எனது கணவர் இல்லை என்றதால், அந்த பெண் எனது கணவரை மிரட்ட தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, எனது கணவர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
இந்நிலையில், விசாகா கமிட்டி மேற்கொண்ட விசாரணையில் பெண் காவலர் உள்நோக்கத்துடன் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் நடவடிக்கை தேவையில்லை என டிஜிபிக்கு அறிக்கை அளித்தது.
இதையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால், இணை ஆணையர் மகேஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற அரசுக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.