Published : 15 Apr 2025 04:45 AM
Last Updated : 15 Apr 2025 04:45 AM
சென்னை: பெண்களின் முன்னேற்றம் இதயத்துடிப்பை போன்றது, சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதில் திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், ரூ.227.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களுக்கு 18 புதிய விடுதிகள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, 19 சமுதாயக் கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடங்கள் ஆகியவற்றின் கல்வெட்டுகளை திறந்து வைத்து, ஆயிரம் பழங்குடியினருக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து பழங்குடியின மக்களுக்காக தொலைதூர மருத்துவம் மற்றும் இ-சேவை மையங்களுக்கான நீண்டதூரம் கம்பியில்லா இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.104.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 48,436 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட முன்னுரையை வழங்கி முதல்வர் கவுரவித்தார். தொடர்ந்து, அம்பேத்கர் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சாதியை அழித்து ஒழித்தல்’ மற்றும் ‘இந்து மதத்தின் புதிர்கள்’ ஆகிய நூல்களையும் வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை பிரகாஷ் அம்பேத்கர் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு முதலாவது உறுப்பினராக நியமிக்கப்பட்ட எம்.சி.ராஜாதான், பட்டியலின மக்களின் துயரங்களை முதன்முதலாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதற்காக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் அவருக்கு மார்பளவு சிலை விரைவில் அமைக்கப்படும். திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகத்தில் இருக்கும் மாணவர்களை நாம் எவ்வளவு கண்ணும், கருத்துமாகப் பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. அதேபோல், பெண்கள் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. இதையொட்டியே விவசாய தொழிலாளர்களாக இருக்கும் ஆதிதிராவிடர் மகளிரை நில உடமையாளராக மாற்றும் ‘நன்னிலம்’ திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 625 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மக்களுக்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், மாநில ஆணையம், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் வழங்கப்படும் மானியத்தை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்’ திட்டத்தில் 3,950 முனைவோருக்கு ரூ.630 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு ரூ.83.71 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் ‘தொல்குடி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாதியின் பெயரால் பிறரைத் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பதை எல்லாம் திமுக உடைத்து நொறுக்கிவிட்டது. கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கைகளில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.
கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம் என அனைத்தும் ஜனநாயகமாக ஆகிவிட்டது. அந்தவகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்துக்கு திட்டங்களை வழங்கியது, வன்கொடுமைகளைக் குறைத்தது, சமூக சமத்துத்துவத்தை நிலைநாட்டுவதில் திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க விரும்பும் நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. இதற்காக தமிழ், தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக பிரகாஷ் அம்பேத்கர் பேசும்போது, “ஆணவக் கொலைகள் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவருகின்றன. அதேநேரம், இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஆணவக் கொலைகள் பட்டியலில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சாதி என்பது அறநெறிகளை அழித்துவிடக்கூடியது” என்றார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன், அன்பில் மகேஸ், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் க.லட்சுமி பிரியா, எம்.பி.க்கள் ஆர்.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT