Published : 14 Apr 2025 10:03 AM
Last Updated : 14 Apr 2025 10:03 AM
தொடர் விடுமுறையையொட்டி மதுரையில் இருந்து இன்று சென்னை வரும் ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழ்ப் புத்தாண்டுடன் தொடர் விடுமுறை முடித்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயில்கள், படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி பேருந்தில் பயணி்க்க மக்கள் வருகின்றனர். ஆனால் அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னை செல்ல அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட எனது குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டியதால் வழிதெரியாமல் மக்கள் திணறுகிறார்கள்.
இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, "ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பேருந்துகளை இயக்கி வருகிறோம். இந்த விலை பட்டியலை http://www.toboa.in/, http://www.aoboa.in/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்வோர் குறித்து நாங்களே புகாரளித்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்றனர்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் கோடை விடுமுறையையொட்டி, படுக்கை வசதி கொண்ட ஏசி இல்லா 20 பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் 50 விரைவு பேருந்துகள் புதிதாக பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது. இதையடுத்து பேருந்து இயக்கம் மேலும் சீராகும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT