Published : 13 Apr 2025 09:25 PM
Last Updated : 13 Apr 2025 09:25 PM
சேலம்: பாஜக- அதிமுக கூட்டணி, அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுகவில் செயற்குழு, பொதுக்குழு, ஆட்சி மன்றக் குழு என எதனையும் கூட்டவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றுவிட்டோம் என பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிமுகவை ஊழல் ஆட்சி என்று அமித்ஷா எல்லா இடத்திலும் கூறியவர்.
இந்தநிலையில், டெல்லியில் 2 மாதங்களுக்கு முன்னரே காணொலியில் திறந்து வைத்த அதிமுக அலுவலகத்தை பார்வையிடச் சென்றதாக கூறிய பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, ஆறு மாதங்கள் கழித்து தான் கூட்டணி குறித்து கூறுவோம் என்றார்.
ஆனால், அமித்ஷா சென்னை வந்ததும், பாஜக-அதிமுக கூட்டணியை பழனிசாமி அறிவித்துவிட்டார். ஜெயலலிதா இருந்தபோது, பாஜக-வுடன் கூட்டணி வைத்து, ஒருமுறை தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்றார். ஆனால், அதிமுகவை பழனிசாமி அடமானம் வைத்துவிட்டார். கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றால், மஹாராஷ்டிராவின் ஷிண்டே நிலை தான் பழனிசாமிக்கு ஏற்படும். அமித்ஷாவுக்கு தெரியாத அரசியலே கிடையாது. இதுதான் அதிமுக-வின் இன்றைய நிலை. நிரந்தரமில்லாத பழனிசாமிக்காக, அண்ணாமலை பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
இனி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிடையாது. ஓபிஎஸ்-ஐ நம்பி நாங்கள் வீண்போய்விட்டோம். சசிகலா, வீட்டிலேயே அமர்ந்து கொண்டு, அதிமுக ஒருங்கிணைக்கப்படும், ஆட்சி அமைக்கும் என்று சொல்லி வந்தார். வரும் ஆண்டிலும் அதைத் தான் கூறுவார்.
பெயர் சொல்ல விரும்பாத ஒருவரும் அதிமுகவுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டபோது, செங்கோட்டையன், அந்த இடத்திலேயே இல்லை. பாஜக- அதிமுக கூட்டணி மீது, மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இனி யாரையும் நம்பி, அதிமுக தொண்டர்கள் இல்லை. கொடி எடுக்கும் தொண்டர்கள், முடிவெடுப்பார்கள் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமித்து பணியாற்ற உள்ளனர். இதில், அதிமுக-வின் தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏ.,-க்கள் என அனைவரும் ஒன்று சேருவர், புரட்சி வெடிக்கும். எம்ஜிஆர் அம்மா ஆட்சி அமைப்போம்” இவ்வாறு புகழேந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT