Published : 12 Apr 2025 05:50 AM
Last Updated : 12 Apr 2025 05:50 AM

அறநிலையத் துறை சட்டங்களை எதிர்க்கும் வழக்குகளை மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: தமிழக, ஆந்திர, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012-ம் ஆண்டு மறைந்த சுவாமி தயானந்த சுவாமி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பலர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959, புதுச்சேரி சட்டம் 1932, ஆந்திரா மற்றும் தெலங்கானா அறநிலையத்துறை சட்டம் 1987 ஆகியவற்றின் அரசியல் சாசன செல்லுபடி தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், சி.எஸ்.வைத்யநாதன் ஆகியோர் ஆஜராகி, இந்த சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு விரோதமானவை என வாதிட்டனர்.

நேரடியாக அணுகியது தவறு: பதிலுக்கு தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பி்ல் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆர். சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோர், தமிழ்நாடு அறநிலையத் துறை சட்டத்தின் செல்லுபடி தன்மையை எதிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது தவறு என்று வாதிட்டனர்.

வழக்குகள் முடித்துவைப்பு: இதேபோல ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்குகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x