Published : 12 Apr 2025 05:22 AM
Last Updated : 12 Apr 2025 05:22 AM
சென்னை: அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக ரூ. 806 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில் ஃபெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கில், உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக ரூ. ஆயிரத்து 521 கோடியே 83 லட்சத்தை வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தமிழக வருவாய் துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்தாண்டு டிசம்பர் வரை ரூ. 806 கோடியே 22 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டியுள்ளது என்றும், இந்த இழப்பீடுகளை வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி ஆயிரத்து 303 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இந்த தொகையை விரைவாக வழங்க ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, நிலுவையில் உள்ள இழப்பீட்டுத்தொகையை வழங்குவதற்காக அதிகாரிகள் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளதாகவும், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்.28-க்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT