பெண்கள் குறித்த பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

பெண்கள் குறித்த பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: இந்து மதம், பெண்கள் குறித்த பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலியல் பெண் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் என குறிப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. : அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.

பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: பெண்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: பொறுப்பற்ற பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம். நீண்ட அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து கருத்துக்களை பொது கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இனியும் அமைச்சர் பதவியில் பொன்முடி நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்

வி.கே.சசிகலா: அமைச்சர் பேசி 5 நாட்கள் கழித்து கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது திமுகவினரின் கண் துடைப்பு நாடகம். அவர் மீது உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in