Published : 11 Apr 2025 06:15 AM
Last Updated : 11 Apr 2025 06:15 AM

அம்​பேத்​கர் பிறந்​த​நாளை முன்​னிட்டு சமூக தளங்களில் ஏப்​.30 வரை விழிப்​புணர்வு போட்​டிகள்

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஏப்.30 வரை பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கவுள்ளார்.

இதில் சமூகநீதி, கல்வியின் முக்கியத்துவம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எது? என்பன உள்ளிட்ட தலைப்புகளின் கதை சொல்லுதல் போட்டி, ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி, ‘அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள்’ என்ற தலைப்பில் விநாடி - வினா போட்டி, பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ் உருவாக்கும் போட்டி, ‘நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்’ என்ற தலைப்பில் பாட்கேஸ்ட் (வலையொலி), ‘அனைவரும் சமம்’ என்ற வகையில் ராப் பாடல் பாடுதல், அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்தல், சமூக வலைதளங்களில் #RiseforEquality ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

மேலும் பங்கேற்பாளர்கள் தங்களது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் அம்பேத்கரின் குறிப்புகள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட்டு தங்களது நண்பர்கள், குடும்பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும். அதிகளவில் பகிரப்பட்ட ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்ஷாட்டுகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் tndiprmhsamathuvamkanbom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை ஏப்.30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x