Published : 11 Apr 2025 06:17 AM
Last Updated : 11 Apr 2025 06:17 AM
சென்னை: கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போதைப் பொருள் வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பிற மாநிலம் மற்றும் நாட்டைச் சேர்ந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன்மூலம் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 10-ல் 8 பேர் இந்த கிரிண்டர் செயலியை பயன்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக அரக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT