Published : 10 Apr 2025 07:25 PM
Last Updated : 10 Apr 2025 07:25 PM

சொத்துக் குவிப்பு வழக்கு: மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

வீரபாண்டி ஆறுமுகம் | கோப்புப்படம்

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் விவசாயத் துறை அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் மதிப்புக்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து கடந்த 2006-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார். அதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரையும் விடுவித்தது சரியெனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதான நபர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை எனக்கூறி இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கிடையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது.

இதையடுத்து, மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், “லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடரவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக வங்கி பரிவர்த்தனைகள், சொத்து தொடர்பான ஆவண, ஆதாரங்களுடன் தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த சொத்துக்கள் தங்களது சுயசம்பாத்தியம் என்ற மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது. அது முழுமையான விசாரணைக்குப்பிறகே தெரியவரும்.

எனவே குற்றம் சாட்டப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்பதால் அதுதொடர்பான சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறேன். எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முறையாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றம் தொடங்க வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x