Published : 11 Jul 2018 09:05 AM
Last Updated : 11 Jul 2018 09:05 AM

ஆக.30-ல் மாநில சுயாட்சி மாநாடு: ராகுல் காந்தி, மாநில முதல்வர்களுக்கு அழைப்பு

சென்னையில் ஆகஸ்ட் 30-ம் தேதி நடக்கவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இந்த மாநாட்டுக்கு அழைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய திருச்சி சிவா, ‘‘ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை யில் நடக்கும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களும் வருவதாக தெரிவித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா ஆகியோரை நாளை சந்திக்க இருக்கிறேன்’’ என்றார்.

மம்தா, குமாரசாமி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், சமாஜ்வாடி கட்சி யின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோரை அழைக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த தலைவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஸ்டாலின், மாநில சுயாட்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அழைப்பு விடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x