

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 12, 13, 14-ம் தேதிகளில் சனி, ஞாயிறு, தமிழ்ப் புத்தாண்டு என தொடர் விடுமுறை வருகிறது.
இதையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 11, 12-ம் தேதிகளில் 905 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 195 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
இதேபோல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு 300 பேருந்துகள் என மொத்தம் 1,420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஏப்.12, 13, 14-ம் தேதிகளில் பயணிக்க 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப். 14-ம் தேதி ஊர் திரும்புவதற்கும் போதிய சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.