Published : 09 Apr 2025 06:44 AM
Last Updated : 09 Apr 2025 06:44 AM
அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கே.என்.நேருவின் சகோதரர்களில் ஒருவரான கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், வருமானவரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, மற்றும் அதே பகுதியில் உள்ள அவரது சகோதரரான மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் வீடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேருவின் மற்றொரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் நடத்தி வரும் டிவிஹெச் கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு, மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னை சிஐடி காலனியில் பிரகாஷ் என்பவரது வீடு, அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நேருவின் மகனும், எம்.பி.யுமான அருண் நேரு நடத்தும் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைச்சர் நேருவின் இன்னொரு சகோதரர் மணிவண்ணன் வீடு அமைந்துள்ள டிவிஹெச் ஏகாந்தா அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது.
சில இடங்களில் நேற்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. மொத்தம் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று மாலை 4 மணியளவில் விசாரணைக்காக ஆர்.ஏ புரத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவரிடம் பல மணி நேரமாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் அளித்த பதில்களை எழுத்து மூலமாகவும், வீடியோவாகவும் வாக்குமூலமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT