Published : 09 Apr 2025 05:13 AM
Last Updated : 09 Apr 2025 05:13 AM
குமுளி: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை மத்திய நீர்வளத் துறை ஆணையத் தலைவர் நேற்று ஆய்வு செய்தார். தமிழக அரசின் அனுமதியின்றி அடிக்கடி இதுபோன்ற ஆய்வுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக ஆணையத் தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி இக்குழுவினர் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். பின்னர், தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய நீர்வளத் துறை ஆணையத் தலைவர் முகேஷ்குமார் சின்ஹா நேற்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். பேபி அணை, மதகுகள், மெயின் அணை உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். தலைமைப் பொறியாளர் ரமேஷ், பெரியாறு வைகை கண்காணிப்புப் பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ராஜகோபால் மற்றும் கேரள நீர்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறும்போது, "மத்திய நீர்வள த்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு இந்த அணை வந்துவிட்டது. கடந்த மாதம் இக்குழு ஆய்வு செய்த நிலையில், அதன் அறிக்கையை இன்னமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இந்நிலையில், தனது கட்டுப்பாட்டில் இல்லாத அணையை நீர்வளத் துறை ஆணையம் ஏன் ஆய்வு செய்கிறது? இதற்கான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தேசிய அளவில் இக்குழுவினர் ஒவ்வொரு அணையாகப் பார்வையிட்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள இடுக்கி உள்ளிட்ட அணைகளை பார்வையிட்ட பின்னர் இங்கும் வந்தனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT