Published : 09 Apr 2025 04:45 AM
Last Updated : 09 Apr 2025 04:45 AM
சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி (அதிமுக) ஒரு விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினார். அப்போது பாமக உறுப்பினர் ஜி.கே.மணியும் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு, ஜி.கே.மணி முதலில் பேச அனுமதியளித்தார். இதனால் பழனிசாமி உட்பட அதிமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர். அப்போது பேரவையில் நடைபெற்ற விவாதம்:-
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: பிரதான எதிர்க்கட்சி அதிமுக. எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி கேட்டால் அவருக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் மற்ற உறுப்பினர்களையும் பேச அனுமதிக்கலாம். அதற்கு நான் தடையாக இல்லை.
பேரவைத் தலைவர் அப்பாவு: ஜி.கே.மணி 2 நாட்களாக அனுமதி கேட்டு வருகிறார். அதனால் அவரை முதலில் பேச அழைத்தேன். அவர் பேசிய பிறகு தங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். உங்கள் தரப்பில் காலை 9.20 மணிக்குதான் வந்து என்னிடம் தகவல் கூறினர். அப்போதே நான் அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் எல்லாரும் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்
அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் வாய்ப்பு தாருங்கள். அப்போதுதான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இந்த அவைக்கு தெரியும். அவர்கள் பேசிய பிறகு நீங்கள் பதில் சொல்லாம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது பேசுவது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என நீங்கள் அறிவித்திருந்தீர்கள். அதேநேரம் காவிரி – குண்டாறு விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசினார்.
அதேபோல், திருச்செந்துார், ராமேசுவரம் கோயில் விவகாரம் தொடர்பாக எங்கள் உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த மார்ச் 26-ம் தேதி பேசினார். அவை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதேநேரம் ஆளும்கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பேசுவது மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.
பேரவைத் தலைவர் அப்பாவு: உண்மைக்கு புறம்பான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்கிறார். சட்டப்பேரவை நிகழ்வுகள் 2021 செப்டம்பர் 9-ம் தேதி முதல் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரலை செய்வதால் மக்கள் மத்தியில் என்ன பிரச்சினை வரும் என்பது குறித்து அறிய ஒரு குழுவானதும் அமைக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு மாநிலங்களில் சென்று நேரலை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கேள்வி – பதில் நேரம் மட்டும் நேரலையில் ஒளிபரப்புவது என்று முடிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. அதில் யாரையும் புறக்கணித்துவிட்டு ஒளிபரப்பு செய்வதில்லை.
இதுதவிர 110 விதிகளின் கீழ் முதல்வரின் அறிவிப்பு, மானியக் கோரிக்கையில் அமைச்சர்களின் பதில் ஆகியவை முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மற்றபடி உறுப்பினர்கள் கொண்டு வரும் கவனஈர்ப்பு தீர்மானங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. உறுப்பினர்கள் அவையில் எவ்வாறு பேச வேண்டும் என்பது தொடர்பாக எல்லோருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பேசும் வார்த்தை தவறானால் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சொன்னதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 4 ஆண்டு காலம்தான் முடிந்துள்ளது. இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அப்போது எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார்.
முன்னவர் துரைமுருகன்: இனி இதுபோல் நடைபெறாது. எதிர்க்கட்சித் தலைவர் இத்தோடு பிரச்சினையை விட்டுவிடலாம்.
இந்த அவையில் தலைவர் செல்வதுதான் தீர்ப்பு. அவரை கேள்வி கேட்க நீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லை. எனினும், அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி கேட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதிப்பது இல்லை. பேசினால் ஒளிபரப்பு செய்வதில்லை. பின்னர் எங்களை வெளியேற்றிவிட்டு எங்களுக்கு எதிராக முதல்வர் பதிவு செய்கிறார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, அடுத்த நிகழ்வுகளுக்கு பேரவைத் தலைவர் சென்றார். இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி உறுபினர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தது உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது. நல்லவேளை காவி உடையில் வராமல் கறுப்பு சட்டையில் வந்துள்ளனர். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT