

திருத்தணி - திருச்செந்தூர் இடையே விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையிலும், முதல்வர் உத்தரவின்படியும் திருத்தணியில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு 191 எச்யு என்னும் வழித்தடத்தில் விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிநவீன சொகுசு பேருந்து இயக்கத்தை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். திருத்தணியிலிருந்து திருச்செந்தூருக்கு மாலை 6 மணி அளவிலும், திருச்செந்தூரில் இருந்து திருத்தணிக்கு மாலை 4 மணி அளவிலும் நாள்தோறும் பேருந்து இயக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.650 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.