7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.5) சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவில் அல்லது சற்று குறைவாக இருக்கும். நாளை முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் 10 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in