சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம்

Published on

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு விரைவான, நம்பகமான, பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது.

இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7-ம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மார்ச் மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39 லட்சத்து 65 ஆயிரத்து 992 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 9 லட்சத்து 81 ஆயிரத்து 849 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 9,492 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 280 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42 லட்சத்து 52 ஆயிரத்து 456 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்-அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in