Published : 31 Mar 2025 12:45 AM
Last Updated : 31 Mar 2025 12:45 AM
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிரட்டும் என வாழ்த்தியுள்ள்னர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் ஆகியவற்றை குணநலன்களாகக் கொள்ள வழிகாட்டியவர் நபிகள் பெருமான். சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்க கற்றுக்கொடுத்தவர். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிரட்டும். இந்த இனிய திருநாளில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, நற்குணங்களை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து, கடைமைகளை மேற்கொண்டு வரும் இஸ்லாமியர்களுக்கு இந்த ரம்ஜான் ஏற்றத்தையும், இன்பத்தையும் தருவதாக அமையட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இந்த ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வாழ்த்துகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் பெருகவும் ஒற்றுமை, மகிழ்ச்சி தழைக்கவும் இந்த புனித நாளில் உறுதியேற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளிய மக்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாமக தலைவர் அன்புமணி: அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்தும் ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
விசிக தலைவர் திருமாவளவன்: 'நோன்பிருத்தல்' என்பது வெறும் சடங்கு அல்ல அது, உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தி தூய்மைப்படுத்தும் வழிமுறை. இத்தகைய நோன்பிருந்து கடமையாற்றும் இஸ்லாமியர்களுக்கு நலமும் வளமும் அமைய ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்னும் உன்னதக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் அனைவரும், எல்லாமும் பெற்று இனிதாக வாழ வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இஸ்லாமிய மக்கள் இப்புனித நன்னாளில் இறைவனின் கருணையும், நல்லாசியையும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ரம்ஜான் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: அன்பு, சமாதானம், கருணை, ஈகை ஆகியவற்றின் உன்னதத்தை எடுத்துரைக்கும் இந்நன்னாளில் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்த சிறப்புமிக்க நன்னாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும் அனைவரும் உறுதி ஏற்போம்.
இவர்களுடன் முன்னாள் எம்பி சு.திருநாவுக்கரசர், தமிழ்நாடு ஐஎன்டியுசி மூத்த தலைவர் மு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கத் தலைவர் சேம.நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டீன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT