

மதுரை: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 27 டன் யூரியா உரம், இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வராக் பிரியோஜனா (பிஎம்பிஜெபி) திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 4474 அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் / கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவில்பட்டி திட்டகுளம் சிட்கோ குடோனில் 45 கிலோ எடையுள்ள 630 யூரியா உர மூடைகளை போலீஸார் 20.1.2025-ல் பறிமுதல் செய்தனர். இந்த யூரியா உரத்தின் மொத்த அளவு 27 டன் ஆகும். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்க வைத்திருந்த யூரியா உர மூடைகளை சட்டவிரோதமாக வாங்கி இலங்கைக்கு ஏற்றுமதி செய்து அதிக விலைக்கு விற்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கூட்டுற சங்கங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் 45 கிலோ யூரியா உர மூடை ரூ.285-க்கு விற்கப்படுகிறது. இந்த உரம் இலங்கையில் ரூ.18500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோசடி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தனியார் உர வியாபாரிகளிடம் உரம் வாங்குவதாக இருந்தால் பல்வேறு ஆவணங்களை வழங்க வேண்டும். அப்படி இருக்கும் போது வேளாண் கூட்டுறவு மற்றும் கடன் சங்கங்களில் இருந்து விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்க வேண்டிய உரங்களை மூன்றாம் நபர்கள் டன் கணக்கில் வாங்கி இலங்கைக்கு கடத்தியுள்ளனர்.
இதில் வேளாண்துறை அதிகாரிகள், கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மத்திய அரசு உரத்தை அத்தியவாசிய பொருட்கள் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் யூரியா உரம் பதிக்கியவர்கள் மீது அத்தியவாசிய பொருட்கள் பதுக்கல் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்யவில்லை. சாதாரண பிரிவுகளில் தான் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை சாதாரண வழக்கு போல் போலீஸார் கையாண்டு வருகின்றனர். சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மையும் வெளிவரும். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபிக்கு மனு அனுப்பியுள்ளேன். அந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.9-க்கு ஒத்திவைத்தனர்.