நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

Published on

மதுரை: நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு : நெல்லையில் சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளருமான ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த 18-ம் தேதி நெல்லை கொலை செய்யப்பட்டார். வக்போர்டுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகிர் ஹுசைன் பிஜிலி அவரது முகநூல் பக்கத்தில் முன்னதாகவே வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதோடு நெல்லை நகர காவல் ஆய்வாளர் மற்றும் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு வீடியோ, ஜாகிர் ஹுசைனின் முகநூல் பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு கோரியும், பாதுகாப்பு அளிக்கப்படாதது, முன்கூட்டியே அவரது கொலை திட்டமிடப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகளின் உதவியோடு செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

சமூக ஆர்வலராக, ஓய்வு பெற்ற உதவி காவல்துறை ஆய்வாளராக, தற்போதைய முதல்வர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது அவருக்கான பாதுகாப்பு அலுவலராக இருந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது பொதுமக்களின் சட்ட ஒழுங்கின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் இதுபோல படுகொலைகள், வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். எனவே, ஜாகிர் ஹுசைன் பிஜிலியின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதோடு, அவரது குடும்பத்துக்கு போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக டி.ஜி.பி வாழக்கின் தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in