தேவநாதன் சொத்துகளை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? - பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேவநாதன் சொத்துகளை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? - பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ்வின் சொத்துக்களை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா என்பது குறித்து பதிலளிக்க தேவநாதன் யாதவ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இந்த நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் கைதாகியுள்ள தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் மிக்கவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்காது என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றார். அதையடுத்து நீதிபதி, தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன்மூலம் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா என்பது குறித்து தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in