

சங்கரன்கோவிலில் சாதி மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், 4 பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில் 2014-ல் ஆங்கிலப் புத்தாண்டின்போது கொடிக்கம்பம் அருகே பட்டா வெடித்தது மற்றும் இறந்தவர் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2014 மே 31-ம் தேதி இரவில் உடப்பன்குளம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உடப்பன்குளத்தைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, சி.கண்ணன், முத்துசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், வி.கண்ணன், முருகன் என்ற பாலமுருகன், முத்துகிருஷ்ணன் உட்பட 25 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டோரில் 3 பேர் உயிரிழந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டோரில் பொன்னுமணி (24), குருசாமி (34), காளிராஜ் என்ற தங்கராஜ் (25), முத்துகிருஷ்ணன் (42) ஆகியோருக்கு தூக்குத் தண்டனை மற்றும் ரூ.4.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், குட்டிராஜ் என்ற பரமசிவன் (30), சி. கண்ணன் (45), உலக்கன் என்ற முத்துசாமி (40), வி.கண்ணன் (28), முருகன் என்ற பாலமுருகன் (48) ஆகியோருக்கு தலா 5 ஆயுள் தண்டனை, இன்னொரு கண்ணன் (31), சுரேஷ் (27) ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.8.05 லட்சம் அபராதம் விதித்தும், 11 பேரை விடுதலை செய்தும் 2014 செப்டம்பர் 24-ல் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்ய போலீஸ் தரப்பிலும், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர். அரசுத் தரப்பில் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நிகழ்ந்துள்ள குற்றத்தின் தன்மை, தூக்குத் தண்டனை விதிப்பதற்குப் போதுமானதாக இல்லை. குற்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அளவுகோல் இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் 4 பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்கப்படுகிறது.
ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில் குட்டிராஜ் என்ற பரமசிவன் (30), உலக்கன் என்ற முத்துசாமி (40), முருகன் என்ற பாலமுருகன் (48) ஆகியோரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்ற 4 பேரின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லாத நிலையில் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.