Last Updated : 04 Apr, 2014 12:00 AM

 

Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: ஜெ. ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு; சசிகலா, சுதாகரன், இளவரசி நாளை நேரில் ஆஜராக உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருகின்ற சனிக்கிழமை ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என முன்னதாக பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரும் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், அவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் மனுவை தாக்கல் செய்தனர். அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபிக்காததால்,நீதிபதி டி'குன்ஹா ஏற்றுக்கொண்டார்.

விசாரணை ஆரம்பமானதும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையா சொத்துகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் புதன்கிழமை அளித்த தீர்ப்பை வாசித்தார்.

‘பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மெடோ அக்ரோ பார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி ஆகிய நிறுவனங்கள் தங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதன் பிறகே சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சார்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜரானாரா?'' என நீதிபதி டி'குன்ஹா வினவி னார்.

‘தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சார்பாக சென்னையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஆஜரானார்''என்றார் வழக்கறிஞர் மணிசங்கர்

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா,''ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக வேறு வழக்கறிஞர் எப்படி ஆஜராக முடியும்'' என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆஜராக உத்தரவு

“வழக்கில் இணைக்கப் பட்டுள்ள மெடோ அக்ரோ பார்ம்,லெக்ஸ் பிராப்பர்ட்டி ஆகிய நிறுவனங்களின் அசையா சொத்துகள் குறித்து நிறைய விளக்கங்கள் பெற வேண்டியுள்ளது. எனவே ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வரும் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.

பெங்களூர் சிறப்புநீதிமன்றம் அன்றைய தினம் பெங்களூர் மத்திய சிறை அமைந்திருக்கும் பரப்பன அக்ரஹாராவிற்கு மாற்றப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக வழங்கும்படி கர்நாடக அரசிற்கும்,கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா.

மதிய இடைவேளைக்குப் பிறகு,நீதிமன்றம் கூடியதும் கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதம் நீதிபதி டி'குன்ஹாவிடம் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் இருக்கிறது. எனவே ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி பிறப்பித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதையடுத்து ''பாதுகாப்பு காரணங்களால் ஜெயலலிதா நேரில் ஆஜராக முடியாததால், அவரிடம் வேறு ஒருநாளில் விசாரித்து கொள்ளலாம். ஜெயலலிதாவிற்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகிய மூவரும் சனிக்கிழமை, சிறப்புநீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என்றார் நீதிபதி டி'குன்ஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x