

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தும், இரண்டு படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் அபராரம் விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பிப்ரவரி 20ந் தேதி சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் புதன்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 6 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நளினி சுபாஸ்கரன் 6 மீனவர்களில் 4 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் 2 மீனவர்கள் படகுகளின் ஓட்டுநர்களாக இருந்ததால் இருவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் தலா. 40 லட்சம் வீதம் இலங்கை ரூ.80 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதன் இந்திய மதிப்பு ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைதண்டைனையும் விதிக்கப்பட்டது.
விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.