Published : 18 Jul 2018 11:16 AM
Last Updated : 18 Jul 2018 11:16 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: நீர்மட்டம் 102.68 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.68 அடியாக உயர்ந்துள்ளது. எனினும் அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை நீர்வரத்து இருந்தது. இதனால், அந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதோடு, அதே ஆண்டு செப்டம்பரில் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேலும், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் அணை நீர்மட்டம் 98 அடி நிரம்பியது. தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி யில் நீர் தொடர்ந்து திறக்கப்பட் டுள்ளதால், ஜூலை தொடக்கத்தில் இருந்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

செவ்வாய்கிழமை காலை நீர்வரத்து விநாடிக்கு 1,07,064 கனஅடியாக உயர்ந்தது. இதனால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு 100 அடியை எட்டியது. நீர் திறப்பு விநாடிக்கு 1,000 கனஅடியாக உள்ளது. அணை நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அணையின் 16 கண் மதகு பகுதியை தண்ணீர் தொட்டது.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.68 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து 1,07,064 கன அடியிலிருந்து 1,04,436 கனஅடியாக குறைந்தது. நீர் இருப்பு 68.35 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x