Published : 15 Mar 2025 08:34 AM
Last Updated : 15 Mar 2025 08:34 AM

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணக் கோரி வெளியுறவு துறை அமைச்சரிடம் நேரில் முறையீடு

ராமேசுவரம்: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தினர்.

அண்மைக்காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, 145 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் சேசுராஜா, எமிரிட், அன்பழகன், சின்னதம்பி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை சந்தித்துப் பேசினர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவரித்ததுடன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகளை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ள நிலையில், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவப் பிரதிநிதிகள், வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x