Published : 21 Jul 2018 01:31 PM
Last Updated : 21 Jul 2018 01:31 PM

காந்தியின் 150-வது பிறந்தநாள்; மீள முடியாத நோய் தாக்கிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மீள முடியாத நோய் தாக்கிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை (அக்டோபர் 2) முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்த தண்டனையில் ஐம்பது சதவீத சிறைத் தண்டனை அனுபவித்த ஆண், பெண் கைதிகளை விடுவிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அதனை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி செயல்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் அடிப்படையில் தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161-ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மீள முடியாத நோய் தாக்கியவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அமைச்சரவை முடிவெடுத்துள்ள நிலையில், தமிழக சிறைச்சாலைகளில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும், குறிப்பாக கோவை சிறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து எஸ்.எல்.ஈ. எனும் கொடிய நோயினால் தாக்கப்பட்டு அதன் காரணமாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்துள்ள சிறைவாசி அபுதாஹிர் உட்பட நோயாளிகளாக உள்ள சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x