Published : 14 Mar 2025 10:43 AM
Last Updated : 14 Mar 2025 10:43 AM
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், பெயருக்குத்தான் கூட்டணி ஆட்சியே தவிர, இரண்டு கட்சிகளும் ஒட்டாமல் தான் உறவாடி வருகின்றன. இதைவிட விநோதம் என்னவென்றால், பாஜக-வுக்குள்ளேயே இங்கே பல கோஷ்டிகளாக இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் பாஜக அமைச்சர்கள், பாஜக நியமன எம்எல்ஏ-க்கள் ஓர் அணியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஓர் அணியாக நிற்கிறார்கள். பாஜக எம்எல்ஏ-க்களான ஜான்குமாரும் கல்யாணசுந்தரமும் சுழற்சி முறையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரினர்.
அது நடக்காது என்று தெரிந்ததும், வாரியத் தலைவர் பதவிக்கு அடிபோட்டனர். ஆனால், அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை முதல்வர் ரங்கசாமி. இதனால் இவர்கள் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டம் நடத்தியதுடன் பேரவையிலும் முதல்வரை விமர்சனம் செய்து பேசினர். கூட்டணியில் இருந்து கொண்டே அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், இதையெல்லாம் மாநில பாஜக தலைவர் செல்வகணதியும், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவும் கண்டும் காணாதது போலவே இருக்கிறார்கள்.
இந்த நிலையில், புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு பெயர் சூட்டும் விஷயத்தில் வாஜ்பாயா, மோடியா என பாஜக கோஷ்டிகள் போட்டிபோட்டுக் கொண்டு மனு கொடுத்து வருகின்றன. புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருந்த ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 29.55 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் வெளியே ‘ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம்’ என பெயர் பலகையையும் அதிகாரிகள் மாட்டிவிட்டனர். இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக கோஷ்டிகள் கொடிதூக்கியுள்ளன.
இது தொடர்பாக மாநில பாஜக பொதுச்செயலாளர் மோகன்குமார் தலைமையில் அமைச்சர் நமசிவாயத்தை அண்மையில் சந்தித்த பாஜக நிர்வாகிகள், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதே கோரிக்கையை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் தாமோதரும் வைத்துள்ளார். ஆனால் ஊர்வலமாக வந்து அமைச்சர் நமசிவாயத்தை சந்தித்த பாஜக எம்எல்ஏ-க்களோ, புதிய பேருந்து நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயரைச் சூட்டவேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஏற்கெனவே இந்தப் பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பெயரை மாற்றக் கூடாது என காங்கிரஸ் தரப்பிலும் குரல்கள் ஒலிக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், “பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவது தொடர்பாக பாஜக-வினர் என்னிடம் வந்து பேசினார்கள்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் பெயரை ஏற்கெனவே பேருந்து நிலையத்துக்கு வைத்து விட்டோம். ஆகவே, அதை மாற்ற வேண்டாம். புதுச்சேரியில் பெரிய மேம்பாலம் பல நூறு கோடி செலவில் கட்டப்படவிருக்கிறது. அந்தப் பாலத்துக்கு வேண்டுமானால் வாஜ்பாய் பெயரை வைக்கலாம் எனச் சொல்லிவிட்டேன்” என்றார்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளோ, “பேருந்து நிலையத்துக்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி முன்பு இருந்த பெயரையே அறிவிப்பு பலகையில் வைத்துள்ளோம்” என்கின்றனர். கட்டி முடிக்கப்பட்டு மாதக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறப்பதற்கு போட்டி போடாத பாஜக-வினர், பேருந்து நிலையத்துக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் போட்டி போட்டு தங்கள் பவரைக் காட்டிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT