Published : 14 Mar 2025 12:35 AM
Last Updated : 14 Mar 2025 12:35 AM
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு பெருமை சேர்க்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
லண்டலில் சிம்பொனியை அரங்கேற்றி திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
நம் உயிரினும் இனிய தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இளையராஜா சிம்பொனியை மீண்டும் அரங்கேற்றியுள்ளார். முதல்முறை அவர் சிம்பொனியை உருவாக்கும்போது இந்தியாவில் உள்ள தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ செய்தி வெளியிடவில்லை என நாடாளுமன்றத்தில் கடுமையாக மத்திய அரசை குற்றம்சாட்டினேன். யாராலும் செய்ய முடியாத சாதனையை பண்ணைபுரத்து இளையராஜா சாதித்துக் காட்டிருக்கிறார் என்பதை ஊடகங்களில் வெளியிடாதது மன்னிக்க முடியாதது என கடுமையாக பேசினேன்.
அதன்பிறகு மதுரையில் அவருக்கு ஒரு விழா ஏற்பாடு செய்தேன். இதற்காக அவர் எனக்கொரு கவிதையும் எழுதினார். தொடர்ந்து அவரது சிம்பொனி வெளியீட்டு நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவயப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், எழுந்து விசிலடித்தார். இளையராஜா இன்னும் புகழ் பெற வேண்டும். அவருக்கு தமிழக அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. அவரை டெல்லிக்கு வரவழைத்து புகழ் சேர்த்திருக்க வேண்டாமா? அந்த ஞானம் எல்லாம் மத்திய பாஜக அரசுக்கு கிடையாது. இவ்வாறு வைகோ தெரிவித்தார். நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT