Published : 13 Mar 2025 04:50 PM
Last Updated : 13 Mar 2025 04:50 PM
சென்னை: முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய க்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ‘நமது கோயில்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரங்கராஜன் நரசிம்மன், தன்னை பழிவாங்கும் நோக்குடன் அரசு இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக சத்தம்போட்டு பேசினார். இதனால் கோபமடைந்த நீதிபதி, “இது ஒன்றும் சந்தையல்ல, நீதிமன்றம்” என கண்டிப்புடன் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த மனு மீது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT